May 5, 2025 17:48:49

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திருகோணமலை எண்ணெய்க் குதங்கள் தொடர்பில் இந்திய நிறுவனத்துடன் உடன்படிக்கை!

திருகோணமலையில் ஐஓசி நிறுவனத்தின் கீழுள்ள 14 எண்ணெய்க் குதங்களை மேலும் 50 வருடங்களுக்கு குத்தகை அடிப்படையில் இந்தியாவுக்கு வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதேவேளை அந்தப் பகுதியிலுள்ள மேலும் 61 எண்ணெய்க் குதங்களை ஐஓசி நிறுவனத்துடன் இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

‘ட்ரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிட்டட்’ என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள புதிய நிறுவனத்தின் ஊடாக அதன் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ‘இந்தியன் ஒயில் கம்பனி’ (ஐஓசி) ஆகியன இணைந்தாக குறித்த புதிய நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான ஒப்பந்தத்தை விரைவில் கைச்சாத்திடவுள்ளதாக இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை இந்த நிறுவனத்தில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் 51 வீத பங்குகளும், ஐஓசி நிறுவனத்தின் கீழ் 49 வீத பங்குகளும் நிர்வகிக்கப்படுமென்று அவர் தெரிவித்துள்ளார்.