
இலங்கையின் நைஜீரியா அபுஜாவில் உள்ள உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனி பிராங்பேர்ட்டில் உள்ள துணைத் தூதரகம் மற்றும் சைப்ரஸ் நிக்கோசியாவில் உள்ள துணைத்தூதரகம் ஆகியவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.
டிசம்பர் 31 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்தத் தூதரங்கள் மூடப்படும் என்று இலங்கை வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கைத் தூதரகங்கள் மற்றும் பணிமனைகளின் வலையமைப்பு மறுசீரமைப்புச் செயன்முறையின் ஒரு பகுதியாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபபட்டுள்ளது.
உலகளாவிய கொவிட் தொற்றால் எதிர்நோக்கும் பொருளாதார சவால்களின் பின்னணியில், வெளிநாட்டு நாணய இருப்புக்களைப் பாதுகாத்தல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் தூதரகங்கள் – பணிமனைகளைப் பராமரித்தல் தொடர்பான செலவீனங்களைக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
இதன்படி தெரிவு செய்யப்பட்ட மூன்று தூதரகங்கள் மூடப்பட்டவுடன், இருதரப்பு அரசியல், பொருளாதாரம், கலாச்சார உறவுகள் மற்றும் தூதரக செயற்பாடுகள் அங்கீகாரம் பெற்ற வேறு இடங்களில் உள்ள தூதரகங்களின் ஊடாக முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய அபுஜா மற்றும் நிக்கோசியா ஆகியவற்றின் விடங்கள் இலங்கையின் வதிவிடமல்லாத தூதரகங்களால் மேற்கொள்ளப்படும்.
பிராங்பேர்ட்டில் உள்ள இலங்கையின் துணைத்தூதரகத்தின் செயற்பாடுகள், வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு, அத்துடன் பிராங்பேர்ட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் இலங்கைப் பிரஜைகளின் கொன்சியூலர் விவகாரங்கள் ஆகியன ஜேர்மனியின் பேர்லினில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் வரும்.
இத்தாலியின் ரோமில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூலம் சைப்ரஸிற்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் வழங்கப்படுவது தற்போதைய நடைமுறையின்படி சைப்ரஸுடனான இலங்கையின் இருதரப்பு உறவுகளைக் கையாள்வதன் மூலம் தொடரும்.
நிக்கோசியாவில் உள்ள துணைத் தூதரகத்தால் கையாளப்படும் தூதரகப் பணிகள் ரோமில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
எவ்வாறாயினும், வழக்கமான அடிப்படையில் கவனிக்கப்பட வேண்டிய சைப்ரஸில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் சுமார் 6,000 இலங்கை ஊழியர் சமூகத்தின் குறிப்பிடத்தக்க தூதரக மற்றும் நலன்புரித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, நிக்கோசியாவைத் தளமாகக் கொண்ட பொருத்தமான தகுதி வாய்ந்த கௌரவ தூதுவரை உடனடியாக நியமனம் செய்வதற்கு வெளிநாட்டு அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இவ்வாறு நியமிக்கப்பட்ட கௌரவ தூதுவர், ரோமில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் வழிகாட்டுதலின் கீழ், வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தல் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஆகியவற்றுடன் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயற்படுவார்.