
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளர் நாயகமும், ஐநா அபிவிருத்தித் திட்டத்தின் உதவி நிர்வாகியும், ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியப் பணிப்பாளருமான கன்னி விக்னராஜாவை அவரது இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த கலந்துரையாடலின் போது, ஐநா அபிவிருத்தித் திட்டத்தினால் ஐந்து தசாப்தங்களாக இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ள அமைச்சர் பீரிஸ், நிலையான அபிவிருத்தி இலக்குகளில் மேலும் முன்னேற்றத்தை அடைந்து கொள்வதற்கு பலதரப்பட்ட ஒத்துழைப்பை இருதரப்பினரும் வலுப்படுத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உட்பட, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான உள்நாட்டு செயன்முறைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றத்தையும் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரம் பல ஆண்டுகளாக பின்னடைவைக் காட்டியதுடன், சிறந்த பொருளாதாரக் கோட்பாடுகளின் அடிப்படையில் கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட பின்னடைவுகளில் இருந்து இலங்கை விரைவில் மீண்டுவருமென உதவிச் செயலாளர் நாயகம் விக்னராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏராளமான இயற்கை வளங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள உதவிச் செயலாளர் நாயகம், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதானது சுற்றுலாத் துறையை மேம்படுத்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உதவிச் செயலாளர் நாயகம் விக்னராஜாவுடன் ஐநா அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி றொபர்ட் ஜுஹ்காம், ஐநா அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதி மலின் ஹெர்விக் மற்றும் ஐநாவின் ஏனைய அதிகாரிகளும், வெளிவிவகார அமைமச்சருடன் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.