June 1, 2025 2:44:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘விசாரணை அழைப்பாணையை தமிழில் தரவும்’: ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மனோ பதில்

விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பாணையை தமிழ் மொழியில் வழங்குமாறு கூறி, சிங்கள மொழி அழைப்பாணையை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஏற்க மறுத்துள்ளார்.

கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் செயலகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்காக தற்போதைய ஜனாதிபதியால் அமைக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மனோ கணேசனுக்கு அழைப்பாணை அனுப்பி வைத்துள்ளது.

கொஹுவளை வலய பொலிஸ் நிலையம் மூலமாக மனோ கணேசனுக்கு ஆணைக்குழுவின் அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பாணை முழு சிங்கள மொழியில் மாத்திரம் இருந்த காரணத்தினால், அவர் அதனை ஏற்க மறுத்துள்ளார்.

அழைப்பாணையை தமிழ் மொழியில் அனுப்புமாறும், அதுவரை விசாரணைக்கு சமூகமளிக்க முடியாது என்றும் மனோ பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு மனோ கணேசன் எம்.பி தமிழ் மொழியிலான ஒரு மின்னஞ்சலையும் அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த ஆட்சியில் இருந்த அமைச்சர்களைத் தண்டனைக்கு உட்படுத்த முடியும் என்று ஜனாதிபதி கூறியிருந்த நிலையில். இவ்வாறு விசாரணைக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

சிங்கள மொழியில் அழைப்பாணை அனுப்பி ஜனாதிபதி ஆணைக்குழு, இலங்கை அரசியலமைப்பின் 4 ஆம் அத்தியாயம், 22 ஆம் விதி (2), (ய) பிரிவை மீறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் மொழி மூலமான அழைப்பாணை கிடைத்த பின்னர் விசாரணையில் கலந்துகொள்வது குறித்துத் தீர்மானிப்பதாக மனோ குறிப்பிட்டுள்ளார்.