July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“வெசாக்கை போல கிறிஸ்துமஸ்ஸுக்கும் மதுபான விற்பனை தடை செய்ய வேண்டும்”; பேராயர் மெல்கம் ரஞ்சித்

நாட்டில் வெசாக் பண்டிகையின் போது மதுபானம் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டால், கிறிஸ்துமஸ் தினத்தன்றும் மதுபான விற்பனை தடை செய்யப்பட வேண்டும் என கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

மதம் என்பது விருந்துபசாரம் மற்றும் குடித்து விட்டு வாழ்க்கையை வீணாக்குவது அல்ல என்றும் அவர் கூறினார்.

கனேமுல்ல – பொல்லத பிரதேசத்தில் உள்ள தேவாலயமொன்றில் நேற்று (12) இடம்பெற்ற ஆராதனை நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பேராயர் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

சுற்றுலா அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட ஹோட்டல்களில் கிறிஸ்துமஸ் தினத்தன்று மதுபானங்களை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பத்திரிகைகளில் பார்த்ததாகவும், கிறிஸ்துமஸ் நாளில் மதுபானம் குடித்துவிட்டு வாழ்க்கையை அழிக்க அனுமதிப்பது நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கா என்று கேள்வி எழுப்பினார்.

அத்துடன், சுற்றுலாத்துறை அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள ஹோட்டல்களுக்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று மதுபானம் குடித்துவிட்டு உயிரை மாய்த்துக் கொள்ளுங்கள். இதுதானா ஆசியாவின் ஆச்சர்யம். இதுதானா நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு. இது மிகப் பெரிய அநியாயம். கிறிஸ்துமஸ் பண்டிகையை அசிங்கப்படுத்தப் போகிறார்கள். சுற்றுலாத்துறை அமைச்சர் இதை நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

அதேவேளை, ஏப்ரல் 21 நடந்த பேரழிவுக்கான எந்த ஒரு செயலூக்கத்தையும் நாம் இன்னும் காணவில்லை என குறிப்பிட்ட பேராயர், தலைமறைவாக உள்ளவர்கள் இன்னும் தலைமறைவாக உள்ளதாக உணர்கிறோம் என்றும் குறிப்பிட்டார்.

ஈஸ்டர் ஆணைக்குழுவின் அறிக்கையில் பலரது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இதுவரை ஒருவர் கூட விசாரிக்கப்படவில்லை எனவும் அவர் விசனம் வெளியிட்டார்.