June 12, 2025 16:20:31

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தோட்டத் தொழிலாளர்கள் உரிமைகளுக்காக போராட்டம்: இ.தொ.காவும் இணைந்தது!

தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் என வலியுறுத்தியும் தோட்டத் தொழிலாளர்கள் நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை நகரில் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளும் பங்கேற்று, கூட்டு ஒப்பந்தத்துக்காக குரல் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் டயகம, தலவாக்கலை, கொட்டகலை, லிந்துலை உள்ளிட்ட பிரதேச தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

அத்துடன் இ.தொ.காவின் பிரதித் தலைவர் அனுஷியா சிவராஜா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சக்திவேல், கொட்டகலை, தலவாக்கலை பிரதேச சபைகளை சேர்ந்த உறுப்பினர்கள் உட்பட இ.தொ.காவின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இப்போராட்டத்தில் பங்கேற்ற மக்கள், தோட்ட நிர்வாகம் மற்றும் பெருந்தோட்ட நிறுவனங்களின் கெடுபிடிகளை கண்டித்துடன், தமது உரிய வகையில் சம்பள கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

”கொழுந்தின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது, அரை நாள் பெயர்தான் விழுகின்றது, ஆயிரம் ரூபா கிடைத்தும் பயன் இல்லை” என தொழிலாளர்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.

கூட்டு ஒப்பந்தம் இல்லாததால்தான் தமக்கு இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டிய அவர்கள், அந்த ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.