
யாழ். மாநகர சபை உறுப்பினர்களால் வரவு- செலவுத்திட்டம் ஏகமனதாக அங்கீகரிக்கப்படும் என்ற நம்பிக்கை இருப்பதாக யாழ்.மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். நாயன்மார்கட்டு குளப்புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் (09) முதல்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, வரவு-செலவுத் திட்ட தயாரிப்பின் போது அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்து பேசி அவர்களுடைய கோரிக்கைகளையும் உள்ளடக்கியே தயாரித்து இருக்கின்றோம்.
ஆகவே அவர்களுடைய கோரிக்கைகளை உள்ளடக்கிய வரவு-செலவுத் திட்டத்தை அவர்களே தோற்கடிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாநகர சபையில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளின் தலைமைகளிடமும் மாநகர சபையில் முன்வைக்கப்படுகின்ற வரவு-செலவுத் திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என நான் பகிரங்கமாகவும் அன்பாகவும் ஒரு கோரிக்கையை விடுக்கின்றேன்.
மாநகர சபை வரவு-செலவு திட்டத்தை தோற்கடிக்கும் முகமாக கட்சித் தலைவர்கள் செயற்படமாட்டார்கள் என நான் நினைக்கின்றேன் என்றார்.