July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இன முரண்பாடுகளை தீர்ப்பதன் மூலமே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்’

அரசாங்கத்தை கவிழ்க்கவோ அல்லது விரட்டியடிக்கவோ நாம் முயற்சிக்கவில்லை.நாட்டின் பிரச்சினைகளை தீர்த்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவே விரும்புகின்றோம்.அதற்கான சந்தர்ப்பத்தை எமக்கும் வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் தெரிவித்தார்.

நாம் வெளிநாடுகளில் சென்று இலங்கைக்கு முதலீடுகளை செய்யுமாறு கூறினோம்.ஆனால் அவர்கள் கேட்கும் விடயம் ஒன்றுதான்.ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் நாட்டில் எப்போதும் குண்டு வெடிக்கலாம் என அச்சுறுத்தும் நிலையில் நாம் எவ்வாறு அங்கு வருவது என கேட்கின்றனர்.

இன்று பாகிஸ்தானில் வேறு இனக்குழு மூலமாக இலங்கை பிரஜை ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டதை போன்று இலங்கையில் பல்வேறு காலகட்டங்களில் பல கொலைகள், அழிவுகள் இடம்பெற்றுள்ளன.தமிழர்கள் அடித்தும், எரித்தும் கொல்லப்பட்ட வரலாறுகள், அதற்கான ஆதாரங்களுடன் உள்ளன. தமிழர் ஆயுதம் ஏந்த முன்னர் நீண்டகால அரசியல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.அரசாங்கத்துடன் பேசி தீர்க்க முடியாத நிலையிலேயே ஆயுதம் எந்த நேர்ந்தது.

இன முரண்பாடுகளை தீர்க்க எமக்கும் ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்.நாம் அரசாங்கத்தை கவிழ்க்கவோ அல்லது வீட்டுக்கு அனுப்பவோ முயற்சிக்கவில்லை. நாட்டின் பிரச்சினைகளை தீர்த்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லவே விரும்புகின்றோம்.அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.