May 30, 2025 15:33:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்க்கட்சியினர் சபை அமர்வை புறக்கணித்தனர்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபை நடவடிக்கைகளை புறக்கணித்துள்ளனர்.

பாராளுமன்றத்தில் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தி சபையை புறக்கணிப்பதற்கு அந்தக் கட்சியினர் தீர்மானித்துள்ளனர்.

இதன்படி ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இன்றைய தினம் சபைக்குள் சென்றிருக்கவில்லை.

இதேவேளை பாராளுமன்றத்திற்கு முன்னால் இன்று காலை அவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர் மனுஷ நாணயக்காரவுக்கு உரையாற்றுவதற்காக மேலதிக நேரத்தை வழங்காமை தொடர்பில் சபையில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது.

இதன்போது சபைக்குள் அமைதியின்மை ஏற்பட்ட நிலையில், மறுநாள் சனிக்கிழமை அது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று காலை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் இது தொடர்பாக இணக்கம் காணப்படாத நிலையில், அவர்கள் இன்றைய சபை நடவடிக்கைகளை புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளனர்.