July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்தவின் சகோதரரின் உருக்கமான கோரிக்கை!

பாகிஸ்தானில் பணிபுரிந்த போது படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்தவின் மரணம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இவர் கொலை செய்யப்பட்டதை காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி பலரின் கவனத்தை ஈர்த்திருந்த அதேவேளை, சமூக ஊடக பயனர்களின் கவலையும் கோபத்தையும் அதிகரிக்கச் செய்திருந்தது.

இந்நிலையில் இந்த காணொளிகள் தொடர்பில் பிரியந்தவின் சகோதரர் உருக்கமான கோரிக்கை ஒன்றை சமூக ஊடக பயனர்களுக்கு விடுத்துள்ளார்.

“எனது சகோதரர் கொல்லப்பட்ட காணொளி காட்சிகளை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம்” என அவர் தனது முகநூல் வாயிலாக கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

மேலும், இந்த காணொளிகள் தனது குடும்பத்திற்கும், குறிப்பாக பிரியந்தவின் மனைவிக்கும், அவரது இரு பிள்ளைகளுக்கும் வேதனையையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு பகிரப்பட்டு வரும் காணொளிகளை உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஊடகங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் தனது பதிவில் மேலும் கூறியுள்ளார்.