July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அபுதாபியில் முக்கிய பிரமுகர்களை சந்தித்தார் ஜனாதிபதி!

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணைப் பிரதமரின் அழைப்பின் பேரில் “எக்ஸ்போ 2020” கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு அங்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ அந்நாட்டு துணைப் பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்தார்.

டுபாயின் துணை ஆளுநர், துணைப் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஷேய்க் மக்தூம் பின் மொஹமட் ரசீத் அல்மக்தூம் (Shaikh Maktoum bin Mohammed bin Rashid Al Maktoum) ஆகியோரை ஜனாதிபதி சந்தித்து உரையாடினார்.

இந்த சந்திப்பு இன்று டுபாய் எக்ஸ்போ – 2020 கண்காட்சி வளாகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஸ ஐக்கிய அரபு இராச்சியத்தின் 50 ஆவது தேசிய தினக் கொண்டாட்டத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இலங்கையின் கலாசாரம் மற்றும் தனித்துவத்தை உலகுக்கு கொண்டு செல்வதற்கு எக்ஸ்போ கண்காட்சிக் கூடம் சிறந்த சந்தர்ப்பமாகுமென்று குறிப்பிட்ட ஜனாதிபதி, அதற்கு வாய்ப்பளித்தமைக்காக தனது நன்றியைத் தெரிவித்தார்.

1083 ஏக்கர் பாலைவனப் பூமியில் நடைபெறுகின்ற “எக்ஸ்போ” கண்காட்சியில் 192 நாடுகள் பங்குபற்றியுள்ளன. “உள்ளங்களை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கண்காட்சி, எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை நடைபெறும்.

இக்கண்காட்சியைப் பார்வையிடுவதற்கு இதுவரை பல்வேறு நாடுகளில் இருந்து மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வருகை தந்துள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ ஐக்கிய அரபு இராச்சியத்தின் கண்காட்சி கூடத்தைப் பார்வையிட்டதோடு, விசேட அதிதிகளுக்காக வைக்கப்பட்டிருந்த நினைவுப் பதிவேட்டிலும் குறிப்பினை பதிவிட்டார்.

இலங்கையில் இருக்கின்ற முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் வர்த்தக, கலாசார தொடர்புகள் பற்றி பிரதமரை  தெளிவுபடுத்துவதற்கு ஜனாதிபதி இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்.

“எக்ஸ்போ – 2020” கண்காட்சி இந்நாட்டு சுற்றுலா கைத்தொழில் மற்றும் தேயிலை, ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்றுமதி துறைகளின் மேம்பாட்டுக்கு சிறந்ததொரு வாய்ப்பாகுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, ஐக்கிய அரபு இராச்சியத்துக்கான இலங்கைத் தூதுவர் மல்ராஜ் டி சில்வா ஆகியோர் ஜனாதிபதியுடன் இச்சந்தர்ப்பத்தில் இணைந்து கொண்டனர்.