July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மின் விநியோகம் வழமைக்கு திரும்ப 3 நாட்கள் ஆகலாம்!

இலங்கையில் நாடு பூராகவும் ஏற்பட்டுள்ள மின் விநியோக தடையை  வழமைக்கு கொண்டு வர 3 நாட்கள் வரை செல்லலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எனவே, மின்சாரத் தேவையின் அடிப்படையில் குறுகிய கால மின் விநியோக தடை ஏற்படக்கூடும் எனவும் இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நாட்டின் மின் தேவையில் 900 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் 3 ஆலைகள் முழுமையாக இயங்கும் வரை இவ்வாறு குறுகிய கால மின் வெட்டு இடம்பெறும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே நாட்டில் ஏற்பட்டுள்ள மின் தடை மின் பொறியியலாளர் சங்கத்தின் நாசகார வேலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அத்தோடு, மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தினர் மின்சார மீள் இணைப்பு பணிகளை வேண்டும் என்றே இழுத்தடிப்பு செய்வதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த முறைப்பாட்டிற்கு அமைய மின்சார பொறியியலாளர்களின் உதவியுடன் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

பிரதான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இலங்கையில் இன்று முற்பகல் 11.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை மின் விநியோகம் முழுமையாக தடைப்பட்டது.