
யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து விஸ்வலிங்கம் மணிவண்ணனை நீக்கும் தீர்மானத்துக்கு யாழ். மாவட்ட நீதிமன்றம் 14 நாட்கள் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை யாழ். மாவட்ட நீதிபதி விநாயகமூர்த்தி இராமக்கமலன் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
குறித்த மனு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட பின் பிரதிவாதிகளை நவம்பர் 11ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டது.
மேலும் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானத்துக்கு 14 நாட்கள் இடைக்காலத் தடை உத்தரவும் விதிக்கப்பட்டது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட அனுப்பப்பட்ட மணிவண்ணன், தமது பங்காளிக் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டதால் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு அந்தக் கட்சி யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கேட்டுக்கொண்டது.
அதனடிப்படையில் வி.மணிவண்ணனின் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவி வறிதாகியதாக யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரால் அவருக்கு அறிவிக்கப்பட்டது.
தனது உறுப்புரிமை நீக்கத்தை சவாலுக்குட்படுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சிறப்பு மனுவை தானே தாக்கல் செய்தார்.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகர் உள்ளிட்ட நான்கு தரப்பினரை மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.
தனது பதவி நீக்கத்தை சட்ட வலுவற்றதாக உத்தரவிடுமாறு கோரிய மனுதாரர், அதன் மீதான விசாரணை நிறைவடைந்து இறுதிக் கட்டளை வரும் வரை இடைக்காலத் தடைக் கட்டளையை வழங்குமாறும் கோரியிருந்தார்.
மனுதாரரான சட்டத்தரணி வி.மணிவண்ணன், தனது மனுவை ஆதரித்து சமர்ப்பணத்தை முன்வைத்தார். இடைக்காலத் தடை உத்தரவை வழங்குமாறும் பிரதிவாதிகளை மன்றில் முன்னிலையாக அறிவித்தல் அனுப்புமாறு அவர் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.