July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை விற்கவா பஷில் இந்தியா சென்றார்?: எதிர்க்கட்சி சபையில் கேள்வி

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இந்தியாவிற்கு விற்கும் நோக்கத்திலா மூடப்பட்டுள்ளது? என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி சபையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதேநேரம், நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஸவின் தற்போதைய இந்திய விஜயத்தில் இது கைமாற்றப்படுமா? எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

நாட்டில் உர பிரச்சினை இருப்பதாகவும், இறக்குமதி செய்ய மாட்டோம் எனவும் கூறி இப்போது கருப்பு சந்தைக்காரர்களுக்கு உர இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், சமையல் எரிவாயு தொடர்பில் பல்வேறு காரணிகளை கூறி, குற்றச்சாட்டுகளை முன்வைத்து எரிவாயு நிறுவனத்தை வேறு எவருக்காவது வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதற்காகவா  தற்போது சமையல் எரிவாயு தொடர்பான பிரச்சினைகள் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதென்ற சந்தேகமும் எழுந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதே நிலைமைதான் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கும் ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய தற்போது சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது.

சிறிது காலம் சென்றதன் பின்னர் இந்த நிலையம் பழுதடைந்துவிட்டது, இதில் பிரச்சினைகள் காணப்படுவதால் அதனை நடத்திச் செல்ல முடியாது என தெரிவித்து, சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமும் எவருக்கும் விற்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நிதி அமைச்சர் பஷில் இந்தியாவுக்கு சென்றுள்ளார். சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இந்தியாவிற்கு வழங்கும் உடன்படிக்கையை செய்யத்தான் பஷில் இந்தியாவுக்கு சென்றுள்ளாரா என்ற கேள்வியும் எழுகின்றது எனவும் சமிந்த விஜயசிறி தெரிவித்துள்ளார்.