July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாட்டில் மின் தடை ஏற்பட வாய்ப்பில்லை’: ரணிலுக்கு கம்மன்பில பதில்

இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் தடை ஏற்பட வாய்ப்பில்லை என்று வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்துக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி நிலைமையால் மின் தடை ஏற்படக் கூடும் என்று ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சாதாரண நிலைமையில் ரணில் விக்கிரமசிங்க கூறியது போன்று நடக்க வாய்ப்பிருந்தாலும், இப்போது அப்படியில்லை என்று வலுசக்தி பதிலளித்துள்ளார்.

“சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடும் போது 79000 மெட்ரிக் டொன் உராய்வு எண்ணெய் களஞ்சியத்தில் இருந்தது.

மழையுடன் கூடிய காலநிலை காரணமாக நீர்மின் உற்பத்தி 55 வீதத்தால் அதிகரித்துள்ளது.

அதனால் உராய்வு எண்ணெய்க்கான கேள்வி தற்போது கிடையாது.

மழையுடன் கூடிய காலநிலை முடிவடைந்தாலும், 40 நாட்கள் வரை மின் உற்பத்திக்கு தேவையான உராய்வு எண்ணெய் களஞ்சியத்தில் உள்ளது.

எனவே, எரிபொருள் தட்டுப்பாட்டால் மின் தடை ஏற்பட வாய்ப்பில்லை”

என்று அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.