July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திலகர் தலைமையில் உருவானது ‘மலையக அரசியல் அரங்கம்’

அறிவார்ந்த அரசியல் உரையாடலை மலையக அரசியல் தளத்தில் உருவாக்கும் நோக்கில் ‘மலையக அரசியல் அரங்கம்’ எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அறிவார்ந்த அரசியல் உரையாடலை மலையக அரசியல் தளத்தில் உருவாக்குதல், அதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதல், மாவட்ட எல்லைகளைக் கடந்த மலையக அரசியலை முன்னெடுத்தல் ஆகியன அமைப்பின் பிரதான நோக்கமாகும் என்று அவ்வமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பொன்று இன்று தலவாக்கலையில் இடம்பெற்றது.

இந்த செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ், மலையக அரசியல் அரங்கின் பிரதான அமைப்பாளர் ராமன் திருச்செந்தூரன், செயற்குழுச் செயலாளர் நாகரட்ணம் கிருஷ்ணகுமார் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

புதிய அரசமைப்பு மற்றும் தேர்தல் மறுசீரமைப்பு என்பன தயாரிக்கப்பட்டுவருகின்றன. பாராளுமன்றத்தில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, சமூகத்தில் அறிவார்ந்த கருத்தாடல்களை உருவாக்கி, சமூகத்தின் தேவை அறிந்து, அவர்களின் தேவைக்கேற்ப யோசனைகளை இனிவரும் தேசிய மட்ட விடயங்களின்போது முன்வைப்போம் என்று திலகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

மலையகம் சமூகம் நூற்றாண்டுகால அரசியல் சமூகம், அதற்கு அரசியல் அடையாளம் இருக்கின்றது. கூலி சமூகம் மட்டும் அல்ல. செனட் சபையில்கூட பிரதிநிதித்துவம் இருந்திருக்கின்றது. எனவேதான் அமைப்பின் சின்னமாக நடேசய்யர் மற்றும் அவரின் பாரியாரின் படங்களை பயன்படுத்தியுள்ளோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மலையக அரசியல் அரங்கமானது, அரசியல் கட்சியாகவோ அல்லது தொழிற்சங்கமாகவோ பதிவுசெய்யப்படவில்லை. சமூக அரசியலை முன்னெடுப்பதற்கான அமைப்பு என்பதால் அதில் எவரும் இணையலாம். என்றும் திலகராஜ் கூறியுள்ளார்.