July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘யுகதனவி’: மனுக்களை பரிசீலிக்க ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம்!

கெரவலப்பிட்டி ‘யுகதனவி’ அனல் மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்காக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலிக்க ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள் நீதியரசர்களான முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று ஆராயப்பட்ட போதே ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாமை நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனெக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி. தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

‘யுகதனவி’ அனல் மின்நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்காக அமைச்சரவையினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களை இரத்துச் செய்ய உத்தரவிடுமாறு கோரி ஜே.வி.பி, ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகள் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அமைச்சரவை உறுப்பினர்கள் சார்பில் சட்டமா அதிபர் ஆஜராகியுள்ளார்.

எனினும் அமைச்சரவை உறுப்பினர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் சார்பில் சட்டமா அதிபர் ஆஜராகவில்லை. இதனால் குறித்த அமைச்சர்கள் சார்பில் தனிப்பட்ட சட்டத்தரணி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.