July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உயர் தொழில்நுட்ப கம்பி மூலம் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் திறந்து வைப்பு!

இலங்கையின் முதலாவது உயர் தொழில்நுட்ப கம்பி மூலம் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  மற்றும் பிரதமர் மகிந்த  ராஜபக்ஷ ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு அமைய இன்று மாலை அதன் திறப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இந்த புதிய பாலத்திற்கு ‘கல்யாணி பொன் நுழைவு’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கொழும்பு நகருக்குள் நுழையும் வாகன நெருக்கடியை குறைக்கும் நோக்கில் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சராக இருந்த போது 2014 ஆம் ஆண்டு இலங்கையில் முதற்தடவையாக அதி தொழில்நுட்ப கேபிள்களை பாவித்து புதிய களனி பாலம் அமைக்கும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

கொழும்பு- கட்டுநாயக்க அதிவேக பாதை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து பேலியகொடை பாலத்தின் சந்தியை மையமாகக்கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த புதிய களனி பாலம் அமைக்கும் திட்டம் ஒருகொடவத்த சந்தியிலும் மற்றும் துறைமுக நுழைவு சந்தியிலும் நிறைவடைகின்றது.

கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதையில் கொழும்பு பக்க முடிவிலிருந்து பண்டாரநாயக்க சுற்றுவட்ட பாதை வரை ஆறு தடவழிகளை கொண்ட இந்த பாலம் அங்கிருந்து ஒருகொட வரையும், இங்குருகடைசந்தி வரையும், துறைமுக நுழைவு பாதை வரையும் நான்கு வழித்தடங்கள் கொண்ட பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் ‘ஜெய்கா’ நிதி பங்களிப்புடன் களனி கங்கைக்கு குறுக்காக அமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் நீளம் 380 மீட்டர் ஆகும்.

இப்பாலம் இரண்டு தொகுதியின் கீழ் அமைக்கப்பட்டது. முதலாவது தொகுதியில் உருக்கினால் ஆன பாலத்தின் பகுதிக்கு 31,539 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன் இரண்டாவது தொகுதியயில் கான்கிரீட் தொங்கு பாலம் பகுதிக்கு 9,896 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

புதிய களனி பாலம் முடிவிலிருந்து ஒருகொடவத்தை சந்தி வரையான பாதையின் இரு மருங்கையும் அலங்கரிக்க பலவகையான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதோடு அவற்றுக்கு தொடர்ந்து நீரை வழங்க நிலத்தடியிலான தானியங்கி நீர் குழாய் தொகுதி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய களனி பாலம் இலங்கையின் வர்த்தக தலைநகரான கொழும்பு நகரின் அழகை மேலும் அதிகரிக்க உதவும் பிரதான அம்சமாக களனி கங்கையின் அழகையும் பாலத்தையும் மெருகூட்டுகின்றது.

உல்லாசப் பயணிகளை கவரும் வகையில் வளர்ச்சியடைந்த நாடுகளில் பாலங்களை அலங்கரிக்க பயன்படுத்தப்படும் அதி தொழில்நுட்ப முறை குறித்து கவனம் செலுத்தி புதிய களனி பாலம் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.