July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”தமிழர்களின் பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் என்ன செய்கிறார்கள்?”: யாழில் ஞானசார தேரர்

தேசவழமைச் சட்டம், கண்டியச் சட்டம், முஸ்லீம் சட்டம் ஆகியன உள்ளிட்ட எல்லா சட்டங்களிலும் இருக்கின்ற நல்ல விடயங்களை சேர்த்து ஒரே சட்டத்தை உருவாக்க வேண்டுமென ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் மக்கள் கருத்தறியும் பணி தற்போது வடக்கு மாகாணத்தில் இடம்பெற்று வருகின்றது.

இதன்படி, அந்தப் பணி இன்று யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது.

ஞானசார தேரர் அங்கு ஊடக சந்திப்பொன்றை நடத்தினார்.

அதன்போது, நாம் ஒன்றுபட எந்த அரசியல்வாதிகள் விரும்பவில்லை அதனால் ஒரே நாடு – ஒரே சட்டத்தையும் அவர்கள் விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை போதைப் பொருளால் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். விளக்கேற்றுவதற்காக கேட்கும் அரசியல்வாதிகள் போதைப் பொருள் தடுப்பு மத்திய நிலையத்தை உருவாக்க தயாராக இல்லையெனவும், தமிழர்களது பிரதிநிதிகள் பாராளுமன்றத்தில் என்ன செய்கிறார்கள் என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன் கடந்த 19 ஆம் திகதி அன்று கார்த்திகை விளக்கீடு நிகழ்வின் போது, பாதுகாப்பு தரப்பினர் தலையீடு செய்தமை தொடர்பில் அது சம்பந்தமான விளக்கத்தை நாம் பெறுவோம் என்றும் ஞானசார தேரர் அந்த ஊடகச் சந்திப்பில் கூறியுள்ளார்.

இதன்போது, ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியில் தமிழர்களை முதலில் சேர்க்காமல் எதிர்ப்புக்கள் வந்த பின்னர் சேர்த்தமை தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர் குறிப்பிடுகையில்,

”இந்த செயலணியை ஆரம்பித்த பொழுது பிரச்சனை ஒன்றாகவே இருந்தது. அந்த சந்தர்ப்பத்தில் தமிழர்களை நியமிக்கவேண்டிய தேவையிருக்கவில்லை.

பொதுவாகவே தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் ஓரே பிரச்சினையே காணப்படுகிறது. அந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம்களை தெரிவு செய்ய வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. முஸ்லிம்களுக்கு பல சட்டங்கள் இருப்பதால் அந்த சட்டத்தை பொதுச் சட்டத்தின் கீழ் கொண்டுவர விரும்பினோம்.” என்று தெரிவித்துள்ளார்.

இதன்படி தேசவழமைச் சட்டம், கண்டியச் சட்டம, முஸ்லீம் சட்டம் ஆகியவற்றில் உள்ள நல்லதையும் பெற்று சிறந்த சட்டத்தை ஏற்படுத்துவோம். கடந்த காலங்களில் நடைபெற்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்காக ஒரே நாடு ஒரே சட்டத்தை உருவாக்குவோம் என்றார்.

இதன்போது ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் உறுப்பினர்களான யோகேஸ்வரி பற்குணராஜா, ஜயம்பிள்ளை தயானந்தராஜா உள்ளிட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.