June 1, 2025 20:44:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்களின் எதிர்ப்பால் கிளிநொச்சியில் காணி அளவீடு நிறுத்தம்!

கிளிநொச்சி பொலிஸாருக்கு காணி அளவீடு செய்வதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டமையினால் அந்த அளவீட்டு பணி நிறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கே. என் 23 கிராம அலுவலர் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

இந்த நிலையில் காணிகளை அளவீடு செய்வதற்காக நில அளவையாளர்கள் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதனையடுத்து அந்த இடத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், காணி உரிமையாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

அத்துடன் குறித்த காணி தொடர்பில் கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்று வருவதாகவும் காணி உரிமையாளர்களால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து காணி அளவீட்டு பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.