July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தடைகளையும் தாண்டி எதிர்க்கட்சி இன்று போராட்டம்!

File Photo

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கொழும்பில் இந்த பேரணி நடைபெறும் என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

உரத் தட்டுப்பாடு, விவசாயிகளின் பிரச்சினை மற்றும் சீமெந்து, சமையல் எரிவாயு தட்டுப்பாட்டினால் நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள சிக்கல்களை முன்வைத்து அரசாங்கத்திற்கு எதிராக இந்த போராட்டத்தை முன்னெடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை கட்சியின் எதிர்ப்பு பேரணிக்கு மக்கள் அழைத்துச் செல்லப்படுவதை தடை செய்யுமாறு நீதிமன்றங்களில் பொலிஸ் நிலையங்கள் கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அநேகமான நீதவான் நீதிமன்றங்கள் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் கொழும்பில் பல பிரதேசங்களில் பொலிஸாரினால் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதுடன், கொழும்பு நகருக்குள் நுழையும் பிரதான வீதிகளில் சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை நாட்டில் மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகள், கூட்டங்களுக்கு தடை விதித்து சுகாதார அமைச்சு விசேட சுற்றுநிருபம் ஒன்றை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.