
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கடற் கரையோர பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பால் பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை இழந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அதேநேரம், அங்குள்ள மீனவ தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களும் பாரிய இடர்களை எதிர்கொள்கின்றனர்.
அத்துடன் கருவாடு தயாரிக்கும் வாடி உற்பத்தியாளர்களின் பெறுமதியான தொழில் தளங்கள் கடலுக்கு இரையாவதோடு பெறுமதியான அரச பொதுக் கட்டடங்களும் நாளாந்தம் சேதமாக்கப்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மூதூர் கரையோர பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடலரிப்பின் காரணமாக, சுமார் இது வரைக்கும் 400 மீட்டர் வரையிலான நிலப்பகுதிக்குள் கடல் உட்புகுந்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
அண்மைக்காலமாக மூதூர் பிரதேசத்தில் கடலரிப்பு மிகவும் தீவிரமடைந்துள்ளதால் அதனைத் தடுக்கும் ஆரம்ப தற்காலிக நடவடிக்கையாக முதன் முதலாக கடந்த 2003 காலப்பகுதியில் கரையோர பகுதிகளில் கற்கள் நிரப்பப்பட்ட கம்பியினாலான கூடுகளில் கற்கள் இடப்பட்டு கடல் கரையிலிருந்து கரையினை நோக்கி 70 மீற்றர் வரையான பகுதிகளில் நிலத்தினை தோண்டி கற்கூடுகள் நிலத்தில் உள்ளீர்க்கப்பட்டன.
எனினும், அது வெற்றியளிக்கவில்லை.அது கடந்த சுனாமி அலைத் தாக்கத்தின் காரணமாக கற்கூடுகள் சேதமாக்கப்பட்டதோடு, கடற்கரையின் வண்மையான தட்டுக்களும் அரிக்கப்பட்டதனாலும் ஒரேயடியாக கடற்கரையின் சுமார் 75 மீற்றர் தூரம் கடலுக்குள் உள்ளீர்க்கப்பட்டது.
இது இவ்வாறு தொடருமானால் மூதூர் கடற்கரையோர பிரதேசங்கள் பெரிதும் பாதிப்படையக்கூடிய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன.
எனவே இவ்விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.