எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கான நட்டஈடு கோரும் செயற்பாடுகள் குறித்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் மூலமாக முன்னெடுக்கப்படுகின்றன. பேச்சுவார்த்தைகள் மூலமாக இதனை தீர்த்துக்கொள்ள முடியவில்லை என்றால் வழக்கு தொடருவோமென நீதி அமைச்சர் அலி சப்ரி நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் பட்சத்தில் இந்த வழக்குகளை இலங்கையில் விசாரிப்பதா அல்லது சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்வதா என்பது குறித்தும் இப்போது ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இது மிகப்பெரிய இயற்கை அழிவாகும்.எனவே இது குறித்து சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்புகளையும் பெற்று அது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இப்போது பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள இடைக்கால நட்டஈடும் கப்பலை மீட்க நாம் செலவழித்த பணம், மற்றும் கழிவுகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்ததாகும்.சர்வதேச அமைப்புகள், ஆய்வாளர்கள் இதில் எமக்கு முழுமையான ஒத்துழைப்புகள் வழங்கியுள்ளனர் என்றார்.