July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பதன் மூலமாக 603 பில்லியன் ரூபாவை அபகரிக்க திட்டம்’

ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிப்பதன் மூலமாக நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நிதியை சேகரிப்பதன் மூலமாக 603 பில்லியன் ரூபாவை அரசாங்கம் வேறு தேவைகளுக்கு பயன்படுத்த சதித்திட்டம் தீட்டக்கூடாது எனவும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இளம் தலைமுறையினர் நாட்டை விட்டு வெளியேறும் நிலையில் அபிவிருத்தியில் அது தாக்கத்தை ஏற்படுத்தும். இந்நிலையில் இலங்கையில் ஆயுட்காலம் அதிகரித்துள்ள காரணத்தினால் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்க முடியும் என கூறுகின்றனர்.ஆனால் இதிலும் சிக்கல் உள்ளது. வயதானவர்கள் நாட்டின் அபிவிருத்திக்கு உதவுகின்றனரா? தொழில்நுட்ப வளர்ச்சியுடன் வயதானவர்கள் பயணிக்க முடியுமா? ஆகவே வயதானவர்களை வைத்துக்கொண்டு தொழில்நுட்ப வளர்ச்சியுடன் போட்டியிட முடியாது.எனவே இளைஞர்களை பணிக்கு அமர்த்த வேண்டிய அவசியம் உள்ளது என்றார்.

இவ்வாறான நிலையொன்று ஏற்பட்டால் குறித்த நிதியை அடுத்து வரும் அரசாங்கமே செலுத்த வேண்டிவரும்.அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 603 பில்லியன் ரூபா செலுத்த வேண்டி வரும்.ஆகவே இது குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும்.அரச தேவைகளுக்காக இந்த நிதியை பயன்படுத்தாது மக்களின் பணத்தை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.