September 28, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘செல்பி’ எடுக்க முயன்ற இளைஞன் ரயிலில் மோதி மரணம்: வவுனியாவில் சம்பவம்!

தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் முருங்கன் பரிகாரி கண்டல் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞரே மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று முற்பகல் மன்னார் – மதவாச்சி பிரதான வீதி கல்லாறு ரயில் பாலத்தில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் முருங்கன் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்கள், செட்டிகுளம் கல்லாறு பாலத்தில் ஏறி தங்களது தொலைபேசியில் செல்பி எடுக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது ரயில் வந்துள்ள நிலையில், ஒருவர் பாலத்தில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பியுள்ள போதும், மற்றைய இளைஞன் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.