July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக வவுனியாவில் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தீர்மானம்!

வவுனியாவில் இடம்பெறும் சிங்கள குடியேற்றத்தை கண்டித்து எதிர்வரும் 10 ஆம் திகதி நெடுங்கேணியில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த தமிழ் கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அனுராதபுரம் வடக்கின் சில கிராமங்களை எல்லை நிர்ணயம் என்ற போர்வையில், வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான முனைப்பை அரசாங்கம் எடுத்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், எம். தியாகராசா, தமிழரசுக்கட்சியின் வவுனியா அமைப்பாளர் ந. கருணாநிதி, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் சார்பில் ஜி. ரி. லிங்கநாதன், மாக்ஸிச லெனினிச கட்சி பிரமுகர் இ. பிரதீபன், வவுனியா வடக்கு பிரதேசசபை தலைவர் எஸ். தணிகாசலம் உட்பட உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள் இன்று வவுனியா வடக்கு பிரதேச சபை மண்டபத்தில் கலந்து கொண்டு குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினர்.

இதன்போது நீண்ட கலந்துரையாடலின் பின்னர் எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பது என தீர்மானித்துள்ளனர்.

குறித்த போராட்டத்திற்கு அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் பொது மக்களும் கலந்துகொண்டு சிங்கள குடியேற்றத்திற்கு எதிராக குரல் கொடுக்க முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.