June 30, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீட்டு திட்டத்தை பூர்த்தி செய்து தருமாறு வலி.வடக்கு மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 2019 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை பூர்த்தி செய்யுமாறு கோரி வலி. வடக்கு பிரதேசத்தை சேர்ந்த மக்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், விவசாயிகளின் இரசாயன உரங்கள் தடைசெய்யப்பட்டமை தொடர்பிலும், கால்நடை தீவனங்களின் விலை அதிகரிப்பு தொடர்பாகவும் கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக முன்னாள் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் வ.பிரபாகரன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதன்போது வீட்டுத் திட்டம், கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் உள்ளிட்டவற்றில் பாதிக்கப்பட்ட மக்கள் அமைதியான முறையில் பதாதைகளை ஏந்தியவாறு தமது கண்டனங்களை வெளியிட்டனர்.

தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க வேண்டும் என்றும் தம்மால் இயலாத விடத்து பொறுப்பானவர்களிடம் உடனடியாக கையளிக்க வேண்டும் என்றும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை வடமாகாண ஆளுநர் ஊடாக பிரதமருக்கும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருக்கும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக வழங்கவுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.