July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கரன்னாகொட வழக்கு; இன்று இரகசிய அறிக்கை சமர்ப்பிப்பு

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையை வாபஸ் பெற்றமைக்கான காரணங்களை விளக்கும் இரகசிய அறிக்கையை சமர்ப்பிக்க சட்டமா அதிபருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (01) அனுமதி வழங்கியது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, கரன்னாகொடவுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை வாபஸ் பெற்றமை தொடர்பில் தொகுக்கப்பட்ட இரகசிய அறிக்கையை தமது திணைக்களம் வைத்துள்ளதாக தெரிவித்ததோடு, அதனை இரகசிய அறிக்கையாக தாக்கல் செய்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியையும் கோரினார்.

அதன் அடிப்படையில், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா மற்றும் நீதியரசர் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அறிக்கையை இன்றையதினம் (02) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.

வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக, நீதிபதிகள் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற தீர்ப்பாயம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை வாபஸ் பெறுவதாக சட்டமா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு ஒக்டோபர் 13 ஆம் திகதியன்று அறிவித்திருந்தார்.

குற்றப்பத்திரிகையை மீளப்பெறுவதற்கான சட்டமா அதிபரின் தீர்மானத்தை எதிர்த்து, கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் நால்வரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனுவுக்கு அமையவே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.