May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் இலங்கையில் முதலீடு!

(Photo:mfa.gov.lk)

இலங்கை வாகன ஆலையில் சீனாவின் தேசிய இயந்திர இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தாபனம் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் சீனாவின் தேசிய இயந்திர இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தாபனத்தின் துணைத் தலைவர் வூ யி, மற்றும் சீனாவுக்கான தூதுவர் கலாநிதி பாலித்த ஹோஹனவுக்கும் இடையே இன்று (30) விசேட சந்திப்பொன்று தூதரகத்தில் இடம்பெற்றது.

இதன்போது இலங்கையில் வாகன தொழிற்சாலையை நிறுவுவதற்கான சாத்தியக் கூறுகளை இருவரும் ஆராய்ந்தனர்.

இதன்போது எம்.ஜி, செர்ரி மற்றும் ப்ரொடொன் ரக வாகனங்களை இலங்கையில் உற்பத்தி செய்து விளம்பரப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனமானது, சீனாவின் தேசிய இயந்திர இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தாபனத்திற்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனமாகும்.

இந்த நிறுவனம், இலங்கையின் மைக்ரோ கார்களுடன் ஏற்கனவே பயனுள்ள உறவை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனம் மைக்ரோ கார்களுடன் விரிவாக்கப்பட்ட கூட்டு முயற்சியை ஆலோசித்து வருவதாக வூ யி தெரிவித்துள்ளார்.

வாகனத் துறையிலான முதலீடுகளை இலங்கை அரசாங்கம் வரவேற்பதாக தூதுவர் கலாநிதி ஹோஹன தெரிவித்தார். ஒரு விரிவான திட்டத்தை முன்வைப்பதற்காக சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தை அவர் ஊக்குவித்தார்.

இந்த சந்திப்பில் துணைத் தலைவர் வூ உடன் சீனாவின் தேசிய இயந்திர இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் யின் கிங், சீனாவின் தேசிய வாகனங்கள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனத்தின் துணைப் பொது முகாமையாளர் கு சாவோகாங், அதன் துணைப் பொது முகாமையாளர் ஜு சியோமி மற்றும் வர்த்தக முகாமையாளர் யான் வென்சுவோ ஆகியோர் இணைந்திருந்தனர்.