
பிரிட்டனின் ஸ்கொட்லாந்து- க்லாஸ்கோவில் நடைபெறவுள்ள ‘சிஒபி: 26 ஐநா காலநிலை மாற்றம்” தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று புறப்பட்டுள்ளார்.
காலநிலை மாற்றம் மற்றும் அதற்கு முகங்கொடுத்து செயற்படுவதற்காக நாடுகள் திட்டமிடும் வழிமுறைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்படும் ஐநா காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு, நாளை தொடக்கம் நவம்பர் 12 வரை க்லாஸ்கோ நகரில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
நவம்பர் 1 மற்றும் 2ஆம் திகதிகள் உலகத் தலைவர்களின் மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
“காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தின் தீர்மானமிக்க சந்தர்ப்பங்கள்” எனும் கருப்பொருளில் நடைபெறும் இம்மாநாட்டில் 197 நாடுகளின் அரச தலைவர்கள், அரச பிரதிநிதிகள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுமார் 25 ஆயிரம் பேர் கலந்துகொள்ளவுள்ளனர்.
பிரிட்டனில் நடைபெறும் மாநாடுகளில் இதுவே மிகப் பெரிய மாநாடாகக் கருதப்படுகிறது.