July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘யுகதனவி’ அனல் மின்நிலைய ஒப்பந்தம்: நாட்டுக்கு பாதிப்பான விடயங்களை மாற்றத் தீர்மானம்!

கெரவலப்பிட்டி ‘யுகதனவி’ அனல் மின்நிலையம் தொடர்பான ஒப்பந்தத்தில் நாட்டுக்கு பாதிப்பான விடயங்களில் மாற்றங்களை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷ உறுதியளித்துள்ளதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியின் கட்சி தலைவர்களின் கூட்டத்திலேயே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தின் போது யுகதனவி அனல் மின் நிலையத்தின் பங்குளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பாக எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷவினால் கட்சித் தலைவர்களுக்கு அது தொடர்பான ஒப்பந்தம் குறித்து தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வேளையில் இது தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு அவதானிப்புகளை முன்வைப்பதற்கு கட்சி தலைவர்கள் மத்தியில் ஒப்புதல் எட்டப்பட்டுள்ளது.

இதேவேளை அதற்கு மேலதிகமாக கொவிட்-19 தொற்று நிலைமை மற்றும் அதிபர்-ஆசிரியர் சம்பள பிரச்சினையின் தற்போதைய நிலை, கொவிட்-19 தொற்றுக்கு மத்தியில் சுற்றுலாத்துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள், இலங்கை துறைமுக அதிகாரசபையின் மேற்கு மற்றும் கிழக்கு முனைய அபிவிருத்தி, அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணித்தல், பொருட்களின் விலையேற்றம் மற்றும் இயற்கை விவசாயம் மற்றும் உரம் ஆகிய விடயங்கள் தொடர்பிலும் கட்சித் தலைவர்கள் கலந்துரையாடியுள்ளளனர்.

இந்தக கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, டக்ளஸ் தேவானந்தா, காமினி லொகுகே, பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.