May 29, 2025 11:39:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செயலணியில் தமிழ் பிரதிநிதிகளை இணைப்பதற்கு முடிவு!

File Photo

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற ஜனாதிபதி செயலணியில் தமிழ் பிரதிநிதிகளை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நேற்று மாலை நடைபெற்ற ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடான கூட்டத்தின் போது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஞானசார தேரர் தலைமையில் 13 உறுப்பினர்களை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள குறித்த செயலணியில் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ள போதும், தமிழர் யாரும் இணைக்கப்படாமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆளுங்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக கலந்துகொண்டிருந்த செந்தில் தொண்டமான் ஆகியோர் தமிழ் பிரதிநிதிகள் அந்தச் செயலணியில் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளனர்.

இதன்படி அந்த செயலணியை விரிவுப்படுத்தி தமிழ் பிரதிநிதிகளை இணைப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.