July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை சந்தித்தார் சீனத் தூதுவர்

இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ.ஷென்ஹொன் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கொழும்பு அலரி மாளிகையில், நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது, இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு சீனாவிடமிருந்து கிடைக்கும் தொடர்ச்சியான ஒத்துழைப்பிற்கு பிரதமர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

அத்துடன், கொவிட் தொற்று நிலைமையை கட்டுப்படுத்தல் மற்றும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு வழங்கும் ஒத்துழைப்புக்கும் பிரதமர் சீனத் தூதுவரிடம் நன்றி கூறியுள்ளார்.

இதன்போது, இலங்கையின் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள சீன தூதுவர், சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தொடர்ந்து இலங்கைக்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சீன மக்கள் வங்கி மற்றும் இலங்கை மத்திய வங்கி இடையிலான 10 பில்லியன் சீன யுவான் மதிப்பிலான இருதரப்பு நிதி பரிமாற்ற ஒப்பந்தமானது, உலகளாவிய முதலீட்டாளர்களின் உணர்வை வலுப்படுத்தவும், இலங்கையின் பொருளாதாரம் மீதான நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் உதவும் என சீன தூதுவர் இதன்போது கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 65 ஆண்டு நிறைவு மற்றும் அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாகின்றமை ஆகியவற்றை குறிக்கும் 2022ஆம் ஆண்டானது, இலங்கை – சீன இருதரப்பு உறவின் மிக முக்கியமான ஆண்டாக விளங்கும் என சீன தூதுவர் சீ.ஷென்ஹொன் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த மாதம் வரவிருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் பிறந்த தினத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி மற்றும் சீன பிரதமரின் சார்பில் சீன தூதுவர் முன்கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.