![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/10/247433615_5051084144920600_3671266587743504506_n-e1635254043188.jpg?fit=959%2C663&ssl=1)
ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு அங்கு சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டது.
இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா ரஷ்ய பாதுகாப்பு படைகளின் தளபதி ஒலெக் சல்யுகோவியின் அழைப்பின் பேரில் மொஸ்கோவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சில் இலங்கை இராணுவத் தளபதிக்கு இராணுவ அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய தரைப்படைகளினால் அங்கிகரிக்கப்பட்டதும் தனித்துவமான அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் இந்த அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதாக இலங்கை இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்போது இலங்கை மற்றும் ரஷ்ய நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு அணி வகுப்பு இடம்பெற்றுள்ளது.
அதனையடுத்து மொஸ்கோ கிரெம்லின் சதுக்கத்தின் அலெக்ஸாண்ட்ரோவ்ஸ்கி கார்டனில் அமைந்துள்ள போரில் உயிரிழந்த ரஷ்ய போர் வீரர்களை நினைவுகூர்வதற்கான நினைவு தூபிக்கு இலங்கை இராணுவத் தளபதியினால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஜெனரல் ஷவேந்திர சில்வா ரஷ்யாவில் தங்கியிருந்த நாட்களில் மொஸ்கோவின் மிகைலோவ்ஸ்கயாவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த உயர் ஆயுதக் கட்டளை கல்லூரிக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததோடு, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பல பகுதிகளுக்கும் சென்றிருந்தார்.
இதேவேளை ரஷ்ய பாதுகாப்பு படைகளின் தளபதி ஒலெக் சல்யுகோவ், 2020 பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.