
இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பான பிரச்சினையை இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகளுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு, இராஜதந்திர ரீதியில் தீர்த்துக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது என்று அமைச்சரவை இணை பேச்சாளரான, அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சனை தொடர்பில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மீனவர் பிரச்சினை தொடர்பில் இராஜதந்திர ரீதியில் இந்திய அரசாங்கத்துடன் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பேசி வருகின்றது. ஆனால் துரதிஷ்டவசமாக இலங்கை- இந்திய கடல் எல்லைகள் அடையாளமிடப்படாத ஒன்றாக இருப்பதால், இந்திய மீனவர்கள் எமது கடலுக்குள் தெரிந்தோ தெரியாமலோ நுழைகின்றனர் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இந்த விடயத்தில் நாடுகளுக்கு இடையிலான நட்புறவுகளை பாதுகாத்து, இராஜதந்திர ரீதியில் செயற்பட்டே தீர்வுகாண வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.