July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போராட்டத்திற்கு தயாராகிறது புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம்

Train Common Image

புகையிரத பருவகால அட்டை (சீசன்) உள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்த முடியும் என்ற தீர்மானம் பருவகால அட்டை இல்லாதவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன,இப்பிரச்சினைக்கு புகையிரத திணைக்களம் உரிய தீர்வை முன்வைக்காவிட்டால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

குருநாகலில் உள்ள புகையிரத நிலைய அதிபர் சங்க காரியாலயத்தில் திங்கட்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்;

கொவிட்- 19 வைரஸ் தாக்கம் குறைவடைந்ததை தொடர்ந்து பயணிகள் புகையிரத சேவை மாகாண எல்லைக்குள் மாத்திரம் வரையறுத்ததாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வகுக்கப்படவில்லை.

புகையிரத பருவகால அட்டை உள்ளவர்களுக்கு மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதனால் பருவகால அட்டையில்லாதவர்கள் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும்போது பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

ஆசன ஒதுக்கல் முறைமை ஊடாக பயணிகள் புகையிரத போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்குமாறு புகையிரத திணைக்களத்திற்கு பலமுறை ஆலோசனை வழங்கியுள்ளோம்.

பருவகால அட்டை உள்ளவர்கள் மாத்திரம் புகையிரத சேவையினை பயன்படுத்துவதால் புகையிரத திணைக்களம் இலாபமடைந்து விடாது. இதனால் ஏற்கெனவே நட்டத்தில் இயங்கும் புகையிரத திணைக்களம் மேலும் நட்டமடைய நேரிடும்.

அனைத்து பயணிகளும் புகையிரத சேவையை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.அதற்கான சிறந்த திட்டங்களை புகையிரத திணைக்களம் செயற்படுத்த வேண்டும். இல்லாவிடின் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.