July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘பிரதேச சபை மட்டத்தில் முடிந்தளவு நிறைவேற்றதிகாரத்தை பரவலாக்கல் செய்வது முக்கியம்’

ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும்போது தொகுதிவாரி மற்றும் விகிதாசாரப் பிரதிநிதித்துவம் முறையே 70% மற்றும் 30% என்ற அடிப்படையில் பகிரப்படும் முறையை பின்பற்றுவது பொருத்தமானது என தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் தெரிவித்தது.

பிரதேச சபை மட்டத்தில் முடிந்தளவு நிறைவேற்றதிகாரத்தை பரவலாக்கல் மற்றும் தொகுதி மட்டத்தில் மக்கள் சபைகளை நிறுவுவதற்கு ஏற்பாடு செய்வது மிகவும் முக்கியமானது என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.பாராளுமன்ற விசேட குழு அதன் தலைவர், சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூடிய போதே இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக உள்ளூராட்சி மன்ற தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி மன்ற பிரதானிகளின் மாகாண சபையை மாகாண அபிவிருத்தி சபையாக மாற்றவேண்டும்.அந்த சபைகளுக்கு மக்கள் இறையாண்மையுடன் தொடர்புடைய அதிகாரங்களை மாத்திரம் வழங்குவது பொருத்தமானது எனவும், அதன் மூலம் மாகாண சபை தேர்தலை இரத்துச் செய்ய வேண்டும் எனவும் தேசிய சுதந்திர முன்னணி சுட்டிக்காட்டியது.

உள்ளூராட்சி அதிகார பிரதேசமொன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையான வாக்காளர்களால் கையொப்பமிடப்பட்ட கோரிக்கையின் மூலம் சம்பந்தப்பட்ட தொகுதியின் உறுப்பினருக்கு வழங்கப்பட்ட ஆணையை இரத்துச் செய்தல் மற்றும் இடைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை வழங்குவதற்கு முன்னர் தேர்தல் ஆணையாளருக்கு சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என்பதுடன், தேர்தலுக்கு நான்கு வாரங்களுக்கு முன்னர் தேர்தல் ஆணையாளரால் அந்த தகவல்கள் வெளியிடப்படுவது பொருத்தமானது என்றும் ஜயந்த சமரவீர குழுவில் பிரேரணை முன்வைத்தார்.

பாராளுமன்ற தேர்தலில் மக்கள் இறையாண்மை சிதைக்கப்படுவதைத் தடுக்க தேசியப் பட்டியலின் மூலம் நியமிக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை மொத்த உறுப்பினர்களில் 5% ஆக குறைக்கப்பட வேண்டும் என்றும் அக்கட்சி தெரிவித்தது.

தேர்தலின் போது செலவிட எதிர்பார்க்கும் நிதி மற்றும் அது எவ்வாறு செலவிடப்படும் என்பதை காட்டும் வரவு-செலவுத் திட்டத்தை உள்ளடக்கிய பிரகடனமொன்றை தேர்தல் ஆணையாளருக்கு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் பரிந்துரைத்தனர்.

இன மற்றும் மத அடிப்படையிலான பெயர்களைக் கொண்ட கட்சிகளின் பதிவுகளை இடைநிறுத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள கட்சிகளின் பெயர்களை மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்தல், ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் என்பவற்றை இரண்டு வாக்குச் சீட்டுக்கள் மூலம் ஒரே சந்தர்ப்பத்தில் நடத்துதல் மற்றும் அந்த தேர்தல்களை காபந்து அரசின் கீழ் நடத்துதல், ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட அனைத்து தேர்தல்களுக்கும் தேர்தல் நடத்தும் காலப்பகுதியை சட்டத்தின் மூலம் குறிப்பிடுதல் மற்றும் அரசியல் தீர்மானங்கள் மூலம் அவற்றை மாற்றுவதற்கு இடமளிக்காமை போன்ற பிரேரணைகள் தேசிய சுதந்திர முன்னணி பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் சமர்ப்பித்த பிரேரணைகளில் உள்ளடங்குகின்றன.

ஜாதிக ஹெல உறுமய கட்சியும் பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் சாட்சியமளித்தது.பாராளுமன்ற, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ஆகிய மூன்று ஆட்சி மட்டங்களிலும் தொகுதி மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையிலான உறுப்பினர்கள் எண்ணிக்கை 60:40 எனும் விகிதத்தில் கலப்பு பிரதிநிதித்துவம் இடம்பெற வேண்டும் எனஅவர்கள் வலியுறுத்தினர்.

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் 4 வருடங்களுக்கு ஒருமுறை ஆண்டில் குறிப்பிடப்பட்ட காலப்பகுதியில் ஒரு தினத்தில் ஒரே தடவையில் நடத்தவேண்டும் என ஜாதிக ஹெல உறுமய பிரேரணை முன்வைத்தது.

ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர் பட்டியலில் நூற்றுக்கு 25 வீதம் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்றும், விகிதாசார பிரதிநிதித்துவத்தின் போது அது மூன்றில் ஒரு பங்காக உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அக்கட்சி குழுவில் சுட்டிக்காட்டியது.

இந்தக் குழுக்கூட்டத்தில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி. சில்வா, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவன்ச, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், கபீர் ஹஷீம், மனோ கணேஷன், மதுர விதானகே ஆகியோர் கலந்து கொண்டனர்.

சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இக்குழுவின் அடுத்த கூட்டம் அடுத்த மாதம் 8 ஆம் திகதி நடைபெறும் என குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.