July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நஷ்டத்தில் இயங்கும் அரசாங்க ஊடகங்களை இலாபமீட்டும் நிலைக்கு கொண்டுவர ஆக்கபூர்வமாக செயற்பட வேண்டும்’

நஷ்டத்தில் இயங்கும் அரசாங்க ஊடகங்களை மீண்டும் இலாபமீட்டும் நிலைக்கு கொண்டுவர ஆக்கபூர்வமான திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அரசாங்க ஊடகங்களில் படைப்பாற்றல் குறைந்து வருவதை ஏற்றுக் கொண்ட அமைச்சர், இது தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற வெகுஜன ஊடகத்துறை அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்க ஊடகமொன்றை பராமரிப்பதற்கு ஒரு நிறுவனத்துக்கு மாதமொன்றுக்கு 35 மில்லியன் ரூபா செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும், சில நிறுவனங்களுக்கு 45 மில்லியன் ரூபா வரையில் செலவாவதாகவும் சுட்டிக்காட்டிய அமைச்சர், அரசாங்க ஊடகங்கள் வணிக ரீதியாக தோல்வியடைவதை அரசாங்கத்தினால் தாங்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இதனைவிடவும் தொலைக்காட்சி அலைவரிசைகளில் வன்முறைகள் நிறைந்த மற்றும் சிறுவர்களுக்கு பொருத்தமற்ற விடயங்களுடன் கூடிய திரைப்படங்கள் விளம்பரப்படுத்தப்படுவதாகவும், அவற்றை விளம்பரப்படுத்த பொருத்தமான ஒளிபரப்பு நேரத்தை பரிந்துரைப்பதற்கு வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

பாராளுமன்ற அமர்வுகளை அறிக்கையிடும் ஊடகங்களில் முக்கியமான விடயங்கள் தவிர்க்கப்படுவதாகவும், இதனால் பாராளுமன்றத்தில் இடம்பெறுகின்ற நாட்டுக்கு முக்கியமான சட்டமூலங்களை சமர்ப்பிப்பது, அவற்றை நிறைவேற்றுவது மற்றும் அவை தொடர்பான விவாதங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய விசேட நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு அமைச்சர் அரசாங்க ஊடகங்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

வடபகுதியில் உள்ளவர்களில் 85 வீதமானவர்கள் இந்தியத் தொலைக்காட்சிகளை பார்வையிடுவதற்கு பழகியிருப்பதால் அப்பகுதிகளில் உள்ள சிறுவர்கள் மத்தியில் இந்நாட்டில் இடம்பெறும் நிகழ்வுகள் தொடர்பில் பொது அறிவு குறைவாகவே உள்ளது என்பதும் இங்கு தெரிய வந்தது.நேத்ரா அலைவரிசையின் ஊடாக முற்பகல் 4.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரை முதலாம் தரத்திலிருந்து 13 ஆவது தரம் வரையில் தமிழ் மொழி மாணவர்களுக்கான கல்வி நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுவதாக இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டார்.

அரசாங்க ஊடகங்களின் ஊடாக வழங்கப்படும் தகவல்கள் நாட்டில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் சரியாக கடத்தப்படாமையே இதற்கு காரணம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.அரசாங்க ஊடகங்களின் பணிப்பாளர் சபையில் தமிழ் பிரதிநிதிகளையும் உள்ளடக்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் காணப்படும் பொருளாதார நிலைமையின் காரணமாக அடுத்த வருடம் அமைச்சுக்கான எந்தவொரு புதிய கட்டுமானப் பணிகளுக்கும் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கப்படாது என்றும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான சந்திம வீரக்கொடி, சாந்த பண்டார, கலாநிதி சுரேன் ராகவன், உத்திக பிரேமரத்ன, வீரசுமன வீரசிங்க, மதுர விதானகே, சார்ள்ஸ் நிர்மலநாதன், சம்பத் அத்துகோரல, மேஜர் சுதர்ஷன தெனிப்பிட்டிய, எஸ்.கஜேந்திரன், குணதிலக ராஜபக்ஷ, உப்புல் கலப்பதி, டயானா கமகே, இலங்கை வானொலிக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், இலங்கை பத்திரிகை சபை, அரசாங்க தகவல் திணைக்களம், இலங்கை மன்றக் கல்லூரி, தபால் திணைக்களம், அரச அச்சக கூட்டுத்தாபனம், தகவல் அறியும் ஆணைக்குழு உள்ளிட்ட நிறுவனங்கள் பலவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.