June 14, 2025 21:43:53

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹப்புத்தளை போராட்டத்தில் தேயிலைக் கொழுந்தை தின்ற வடிவேல் சுரேஷ்

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் விவசாயிகளின் உரத் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு ஹப்புத்தளை நகரில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நடத்தப்பட்டது.

ஹப்புத்தளை நகரிலுள்ள கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டு, தேங்காய் உடைத்து கவனயீர்ப்புப் பேரணி ஆரம்பமானது.

இதன்போது ஒப்பாரி வைத்தும், சவப்பெட்டியை ஏந்தியும் பேரணியில் கலந்துகொண்டோர் தமது எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன், தமக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் கோஷம் எழுப்பினர்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், தேயிலைக் கொழுந்தை தின்று தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இதன்போது மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், ”அனைத்து வளங்களும் நிறைந்த நம் இலங்கை திருநாடு இன்று வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றது. குழந்தைகள் குடிப்பதற்க்கு பால் மா இல்லை, அரிசி தட்டுப்பாடு, உரத்தட்டுப்பாடு பெருந்தோட்ட மக்கள் தேயிலை கொழுந்தை உண்ண வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.