July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘வடமராட்சி கிழக்கில் பொலிஸாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் அகழ்வு’

வடமராட்சி கிழக்கில் பொலிஸாருடன் இணைந்தே சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.

மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களுக்கு இன்று (20) நேரடியாக சென்று பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

“நீண்ட நாட்களாக சட்டவிரோதமான மணல் கொள்ளை இந்தப் பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக நான் ஒருமுறை எனது வாகனத்தில் வரும்போது கடத்தல்காரர்கள் என்னைக் கண்டதும் தமது வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்றதை நேரடியாகக் கண்டேன்.

அதேபோல் இப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளார்கள்.அதாவது சட்டவிரோத மணல் அகழ்வு தனியார் காணிகளில் இடம்பெற்று வருகின்றது.

சட்டவிரோதமாக மணல் அகழ்வு தொடர்பில் பொலிஸாரிடம் தகவல் வழங்கும்போது அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்கள்.ஆனால், அவ்வாறு முறையிடும்போது மணல் கடத்தல்காரர்களிடமிருந்து பொலிஸாரிடம் முறையிட்டவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வருகின்றது. எனவே,பொலிஸாருடன் இணைந்து இந்த சட்டவிரோத மணல் கொள்ளை ஈடுபடுவது என்பது நிரூபணமாகின்றது.

எனவே,குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.