July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மீண்டும் நாட்டில் வைரஸ் பரவினால் நாட்டை முடக்க நேரிடும்’

மக்களின் செயற்பாடுகளில் பாரிய அதிருப்தியில் நாம் உள்ளோம்.மீண்டும் நாட்டில் வைரஸ் பரவினால்,மீண்டும் நாட்டை முடக்க நேரிடும்.அதற்கு இடம் வழங்காத வகையில் மக்கள் செயற்பட வேண்டும் என சுகாதார பணியகத்தின் பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொவிட் வைரஸ் பரவல் கட்டுப்பாட்டு நிலைமையில் உள்ளது என்பதற்காக நாம் சகல சவால்களில் இருந்து விடுபட்டு விட்டோம் என அர்த்தம் கொள்ள முடியாது.ஆனால் மக்களின் அண்மைக்கால செயற்பாடுகளை அவதானிக்கையில், நாடு கொவிட் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் நிலையில் இல்லாததை போன்ற எண்ணப்பாட்டில் மக்கள் செயற்பட்டுக் கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர்,

நாட்டை திறக்க பல்வேறு காரணிகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம்,பணிகள்,மாணவர்களின் கல்வி போன்ற அத்தியாவசிய செயற்பாடுகளை கருத்தில் கொண்டே நாட்டை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதே தவிர, சுகாதார வழிமுறைகளை மீறிய மக்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக அல்ல எனவும் கூறியுள்ளார்.

இப்போது வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளை தவறாக பயன்படுத்திக்கொண்டு,மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக மீண்டும் வைரஸ் பரவல் நாட்டில் ஏற்பட்டால், நாட்டை முடக்குவதை தவிர வேறு மாற்றுத் தெரிவுகள் இருக்கப்போவதில்லை.டெல்டா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை.கொரோனா வைரஸ் வேறு திரிபுகளை ஏற்படுத்திக் கொண்டு வீரியத்தை அதிகரித்துக் கொண்டு வேகமாக பரவலாம்.

அவ்வாறான நிலைமை உருவானால் நாட்டை மூடுவது மட்டுமே தெரிவாக இருக்கும்.எனவே இதனால் சகல மக்களும் நாடும் பாதிக்கப்படும் நிலை உருவாகும்.இப்போது நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டே நாடு திறக்கப்பட்டுள்ளதே தவிர, மக்கள் குதூகலமாக விடுமுறைகளை வழமை போன்று கொண்டாடுவதற்கு அல்ல.இவ்வாறான மோசமான செயற்பாடுகள் காரணமாக மக்களே பாதிக்கப்படப் போகின்றனர் என்றார்.