July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் மாடறுப்பைத் தடை செய்வதற்காக சட்டத்தை திருத்த நடவடிக்கை

இலங்கையில் மாடறுப்பைத் தடை செய்வதற்காக சட்டத்தை திருத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர், அரச சேவைகள்- மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் விவசாய அமைச்சர் ஆகியோர் கூட்டாக சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

உள்ளூர் விவசாயத்துறை மற்றும் உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக பசு வதையை செய்வதை தடை செய்வதற்கும், அதற்கு ஏற்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளையும், விலங்கு அறுப்பு தொடர்பான உள்ளூராட்சி மன்றங்களால் நிறைவேற்றப்பட்டுள்ள துணைச் சட்டங்களைத் திருத்தம் செய்வதற்கும், 2020 செப்டெம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, 272 ஆம் அத்தியாயத்தின் 1893 ஆம் ஆண்டு 09 ஆம் இலக்க பசு வதை கட்டளைச் சட்டம், 1958 ஆம் ஆண்டு 29 ஆம் இலக்க விலங்குகள் சட்டம், 252 ஆம் அத்தியாயத்தின் மாநகர சபைகள் கட்டளைச் சட்டம், 255 ஆம் அத்தியாயத்தின் நகரசபைகள் கட்டளைச் சட்டம், 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க பிரதேச சபைகள் சட்டம் போன்ற சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்களைத் திருத்துவதற்காக சட்ட வரைஞரால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.