July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

21 ஆம் திகதி பாடசாலைகளுக்கு செல்ல மாட்டோமென ஆசிரியர் சங்கங்கள் அறிவிப்பு

எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் தாம் பாடசாலைகளுக்கு செல்ல மாட்டோம் என்று இலங்கை அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் கூட்டணி அறிவித்துள்ளது.

கொவிட் தொற்று நிலைமையால் கடந்த மே மாதம் முதல் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஒக்டோபர் 21 ஆம் திகதி தொடக்கம் பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி 200 க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகள் 21 ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படவுள்ளன.

இந்நிலையில் தமது சம்பள முரண்பாட்டு பிரச்சனை தொடர்பில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் அதிபர், ஆசிரியர் சங்கங்கள் அன்றைய தினத்தில் பாடசாலைகளுக்கு செல்லாதிருக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளன.

இது தொடர்பில் இன்று கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்திய அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் கூட்டணி, பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் 25 ஆம் திகதி வரையில் தமது போராட்டத்தை தொடருவோம் என்று தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் 25 ஆம் திகதி பாடசாலைக்கு சென்று கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்றும், தமது கோரிக்கைகள் தீர்க்கப்படும் வரையில் அரசாங்கத்திற்கான தமது அழுத்தங்களை தொடர்ந்தும் வழங்குவோம் என்றும் அந்தக் கூட்டணி தெரிவித்துள்ளது.