July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைதானவர்களின் வீட்டாரை ஏமாற்றி பணம் பெற்றவர் கைது!

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் சிலரை விடுவிப்பதாக தெரிவித்து, அவர்களின் உறவினர்களிடம் பணம் பெற்றுக்கொண்டதாக கூறப்படும் நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பணம் பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், கெபலமுல்கொல பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபர் எனவும், அவர் குற்றச்செயல்கள் தொடர்பில் விளக்க மறியலில் இருந்து விடுவிக்கப்பட்டவர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர், பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரியொருவரை போன்று நடித்து, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் உறவினர்களிடம் பெருமளவு பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக விசாணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் தொடர்பில், பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், தான் விளக்கமறியலில் இருந்தபோது,  ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தொடர்பாக தகவல்களை பெற்றுக்கொண்டதாக கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்படி இவருக்கு குறித்த தகவல்களை வழங்கிய நபர்களை கண்டுபிடிக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.