![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/10/cd646d4a-78ea-4090-bdc4-ec187a70baa4-1020-000000d9a1a68caa_file.jpg?fit=600%2C360&ssl=1)
முன்னாள் பிரதியமைச்சர் நிருபமா ராஜபக்ஸவின் சொத்து விபரங்களை வெளிப்படுத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழு, பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் ஆகியவற்றுக்கு ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு 3 தகவல் அறியும் உரிமை விண்ணப்பப் படிவங்களை தாக்கல் செய்துள்ளது.
நிருபமா ராஜபக்ஸவின் சொத்து விபரங்களை கோரி தேர்தல்கள் ஆணைக்குழு,பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் ஆகியவற்றுக்கு முறையே தேர்தல் வேட்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதியமைச்சர் என்ற அடிப்படைகளில் தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்களை எமது அமைப்பு தாக்கல் செய்துள்ளது.
1975 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பிரகடன சட்டத்திற்கு அமைவாக, பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட பதவி வகிக்கும் அரச அதிகாரிகள் தமது வாழ்க்கைத் துணை மற்றும் அவரைச் சார்ந்துள்ள பிள்ளைகளின் சொத்துக்கள்,பொறுப்புக்கள் உள்ளடங்கலான சொத்து மற்றும் பொறுப்புக்களின் வருடாந்த பிரகடனங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
அதேவேளை இவ்விடயத்தில் பணத்தூயதாக்கல் இடம்பெற்றிருக்கக்கூடுமா? என்பது குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி நிதிக் குற்ற விசாரணைப் பிரிவிற்கும் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று ட்ரான்ஸ்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.