July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ஜெனிவா தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு தருவோம்”: சிறீதரனிடம் கனேடியத் தூதுவர்

தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.

கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினான், சிறீதரனின் அலுவலகத்தில் இன்று முற்பகல் அவரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, தமிழர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பில் சிறீதரன் எம்.பி, கனேடியத் தூதுவரிடம் கூறியுள்ளார்.

தமிழர்கள் தமது உணர்வுபூர்வமான நினைவுகளை மேற்கொள்வதற்கு கொரோனாவை காரணம் காட்டி தடைகள் விதிப்பது தொடர்பாகவும் அதனை மீறி நினைவேந்தல்கள் இடம்பெற்றால் புலனாய்வாளர்கள் மூலமாக நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களை அச்சுறுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலாலும் தமிழ் இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில் உள்ள பின்னடைவாலும் இலங்கையில் வட பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் சிறீதரன் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தொல்பொருள் என்ற போர்வையில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் அபகரிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மாகாண சபைகளினுடைய அதிகாரத்திற்குள் இருக்கின்ற பாடசாலைகள், வைத்தியசாலைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றது. அத்துடன் வெளியில் காணி அதிகாரம் போலீஸ் அதிகாரம் மட்டும் பேசிக்கொண்டு இருக்கும் போது இருக்கின்ற அதிகாரத்தினையும் இலங்கை அரசு மாகாணங்களிடம் இருந்து பறித்துக்கொண்டு இருக்கிறார்கள் எனவும் கனேடியத் தூதுவருக்கு தெரிவித்துள்ளார்.

இதன்போது கனேடிய தேசிய விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கும் ஜெனிவா தீர்மானங்களில் கனடிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் ஒத்துழைப்புகளுக்கும் கனேடிய அரசிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

இவ்வேளையில் கனடிய அரசாங்கம் மனிதாபிமானத்துடனும் பக்கர்ச்சார்வபு இன்றியும் தொடர்ந்தும் ஜெனிவா தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு தருவோம் எனவும் கனடிய தூதுவரின் உறுதிமொழி வழங்கியதாகவும் சிறீதரனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.