May 11, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இளைஞர்கள் கடத்தல் சம்பவத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி கரன்னாகொட மீதான குற்றப்பத்திரம் நீக்கம்

இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்ட சம்பவத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி வசன்த கரன்னாகொட மீதான குற்றப்பத்திரத்தை நீக்கிக்கொள்வதாக சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரமே இவ்வாறு திரும்பப் பெறப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தில் முன்னாள் கடற்படைத் தளபதி வசன்த கரன்னாகொடவும் தொடர்புபட்டுள்ளதாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

தனக்கு எதிராக மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தை வலுவிழக்கச் செய்யக் கோரி, வசன்த கரன்னாகொட ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி அவன்தி பெரேரா குற்றப்பத்திரத்தை நீக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளார்.