July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அதிபர், ஆசிரியர்களின் போராட்டம் தொடரும் என அறிவிப்பு!

தொழிற்சங்கப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு இலங்கை அதிபர், ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுப் பிரச்சனைக்கான தீர்வு தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதும், அதில் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை முன்வைக்கவில்லை என்று ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.

நேற்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சம்பள முரண்பாட்டு பிரச்சினைக்கான தீர்வை மூன்று கட்டங்களாக வழங்குவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து  பிரதமர், ஆசிரியர் சங்கங்களுக்கு தெளிவுப்படுத்தியிருந்தார்.

ஆனால் தமக்கு ஒரே தடவையில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்ததை தொடர்ந்து, அதனை இரண்டு கட்டங்களாக வழங்க முடியுமென்று பிரதமர் கூறியிருந்தார்.

இதன்படி முதலாவது கட்ட தீர்வை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 2022 ஜனவரி முதலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தை 2023 ஜனவரிலும் வழங்க நடவடிக்கையெடுப்பதாக பின்னர் பிரதமர் ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்திருந்தர்.

எனினும் இதன்போது அனைத்து ஆசிரியர் சங்கங்களும் கூட்டாக இணைந்து இது தொடர்பில் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பதாக அந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டிருந்த ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்திருந்தன.

இதன்படி இன்று முற்பகல் கொழும்பில் கூடியுள்ள ஆசிரியர் சங்கங்கள், பிரதமர் முன்வைத்த தீர்வை ஏற்க மறுத்துள்ளன. இதன்படி தொழிற்சங்கப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்கள் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.