May 20, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

5 பேரை பலியெடுத்த இராகலை தீ விபத்து தொடர்பாக சந்தேகத்தில் ஒருவர் கைது!

ஐந்து உயிர்களை பலியெடுத்த நுவரெலியா, இராகலை தோட்ட தீ விபத்து சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தீவிபத்துக்கு உள்ளான வீட்டில் வசித்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 7 ஆம் திகதி இடம்பெற்ற தீ விபத்து சம்பவத்தில் 61 மற்றும் 57 வயது தம்பதியும் அவர்களின் மகளான 34 வயது பெண்ணும் அந்தப் பெண்ணின் 13 மற்றும் ஒரு வயது பிள்ளைகளும் உடல் கருகி உயிரிழந்திருந்தனர்.

எனினும் இந்த சம்பவத்தில் குறித்த வீட்டில் இருந்து  உயிர் தப்பியிருந்த நபரொருவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் சந்தேகத்தில் அவரை கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து சந்தேக நபர், நேற்று வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவத் தினத்தன்று சந்தேக நபர், இராகலை எரிபொருள் நிலையத்தில் பெட்ரோல் வாங்கியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. அத்துடன், வீடு தீப்பற்றி எரியும் போது, அந்த நபர் வீட்டுக்கு வெளியே மதுபோதையில் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி அவரை கடந்த சில தினங்களாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்த இராகலை பொலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விளக்க மறியலில் வைக்க நடவடிக்கையெடுத்துள்ளனர்.