July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னார் – அருவியாற்றில் மணல் அள்ளுவதற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு

மன்னார் அருவியாறுப் பகுதியில் மணல் அகழ்வதற்கு தடை விதிக்குமாறு கோரி மன்னார் நீதிவான் சிவகுமார் முன்னிலையில் நானாட்டான் பிரதேச சபையின் தலைவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் சம்பந்தப்பட்ட எதிர்த் தரப்புகளை எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி விளக்கம் தருமாறு உத்தரவிட்டது.

ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம்.பி இன்று (12) மன்னார் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கேசவன் சயந்தன். கிராய்வா ஆகியோர் சகிதம் முன்னிலையாகி இந்த வழக்கை சமர்ப்பித்தார்.

அருவியாறு பரிகாறக்கண்டல் ஆத்திமோட்டை, பன்னவெட்டுவான், அடியாச்சிக்குளம் பகுதியில் வகை தொகையின்றி மணல் அகலப்படுவதாக பிரதேச சபைத் தலைவர் தி.பரஞ்சோதி நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கமத்தொழில் திணைக்களம் இந்த ஆற்றுப்படுக்கையில் மணல் அள்ளக்கூடாது என உத்தரவிட்டுள்ளதாக அறிகிறோம்.

புவிசரிதவியல் அளவைகள் மற்றும் சுரங்கங்கள் பணியகம் மணல் அள்ளுவதற்கு வழங்கிய அனுமதி கூட கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்துவிட்டது. ஆனால் அதன் பின்னரும் மணல் அள்ளும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதால் பெரும் சூழலியல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வழக்காளிகள் தரப்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

விடயத்தை பரிசீலித்த நீதிவான் எதிராளிகளை எதிர்வரும் 29 ஆம் திகதி நீதிமன்றில் பிரசன்னமாகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டார்.